Tuesday, November 17, 2020

காலமும் நானும்

Posted by sasi at 11:29 PM 0 comments

 


நதி கேட்டு

கடல் கொண்டது அன்று

சமுத்திரம் யாசித்து

பனித்துளி அடைந்தது இன்று

 

முட்களின் படுக்கையிலும்

கனவு கொண்டது அன்று

பூக்களின் மஞ்சத்திலும்

புழுங்குவது இன்று

 

அலை போல

துள்ளிக் கிடந்தது அன்று

மலை போல

மெளனங் கொள்வது இன்று

 

வேரென்று கூவியது

அன்று

இலையென்று உரைத்தது

இன்று

 

இடியாய்

முழங்கியது அன்று

செடியாய்

அசைவது இன்று

 

விரிந்து கிடந்த

உப்புக் கடல் அன்று

திறந்து கிடக்கும்

நன்னீர் சுனை இன்று

 

ஆசைகளின்

அணிவகுப்பு அன்று

அனுபவங்களின்

மாநாடு இன்று

 

சூடான சூரியன்

அன்று

சுத்தமான பனித்துளி

இன்று

 

தலைக்கு

மழை கேட்டது அன்று

மழைக்கு

குடை கேட்பது இன்று

 

எடைக்கு எடை

கனவு கொண்டது அன்று

நகத்தளவு

நனவானது இன்று

 

அறிவே

ஆன்டவன் என்றது அன்று

அனுபவங்களே

வரம் தந்தது இன்று

 

சுகம் மட்டுமே

தேவையென்று சூளுரைத்தது அன்று

வலியும் கொஞ்சம் இருக்கட்டுமென்று

வேண்டிக் கொள்வது இன்று

 

வரவை மட்டுமே

கணக்கு வைத்தது அன்று

செலவையும் சேர்த்தே

குறித்துக் கொள்வது இன்று

 

நிலாவில் ஏறி

விண்மீனுக்கு தாவியது அன்று

மேடு பள்ளம் கணித்தே

மண்ணில் காலூன்றுவது இன்று

 

பாறையென்றே

இறுகிக் கிடந்தது அன்று

உளிக்கு உடன்படுவது

இன்று

 

வானமெங்கும்

திரிவதே வாழ்க்கை அன்று

கூட்டுக்குள் அடைவதே

வாழ்க்கை இன்று

 

காலில்

முள் தைத்தது அன்று

முள்ளில்

கால் தைத்தது இன்று

 

விண்மீன்களையும்

தின்று செரித்தது அன்று

வெறும் மீனையும்

விழுங்கத் திணறுவது இன்று

 

ஆலகாலம் அருந்தியே

தேகம் வளர்த்தது அன்று

அமிர்தமே ஆனாலும்

அளவோடிருத்தல் இன்று

 

தேனென்பது விருந்து

அன்று

தேனென்பது மருந்து

இன்று

 

நாளெல்லாம்

வளர்பிறை அன்று

தேதியெல்லாம்

தேய்பிறை இன்று

 

தனிமை

சிறகு அன்று

தனிமை

சிறை இன்று

 

நடந்தால்

உடன் நிலா வந்தது அன்று

ஊன்று கோல் மட்டும்

உடன் வருகிறது இன்று

 

சூர்யோதயம்

பேரழகு அன்று

அஸ்தமனம் கூட

அழகாகிறது இன்று


sasiboojium.blogspot.com

Monday, November 16, 2020

இன்றைக்கு ஷாஜஹான்கள்

Posted by sasi at 8:56 PM 0 comments















ஊருக்கு மத்தியில்

நல்ல நிலம் பார்

பளிங்கு கொண்டா

தேக்கு எங்கே ?

வாஸ்து சரியா ?

பொறியாளரை வரவழை

சித்தாளுக்கு கூலி எவ்வளவு ?

எல்லாம் தயார் 

அன்பே,,,,

உனக்கொரு தாஜ்மகால்

நானெழுப்ப......

நீ கண் மூடும் நன்னாளில்

இனிதே தொடங்குவேன்

அத்திருப்பணியை


sasiboojium.blogspot.com

 

sasi Template by Ipietoon Blogger Template | Gift Idea