Wednesday, April 22, 2020

கவலையுறாதே மனிதா

Posted by sasi at 1:32 AM














சீனாவில் பிறந்து
பூதாகரமாய் பல்கிப் பெருகி
உலகமெங்கும் விஸ்வரூபமெடுத்து
நிராயுதபாணி மனிதனை பலி கொண்டு
பூமியை துக்க வீடாய் செய்தது
இந்த கரோனா

விண்ணுக்கு தாவிய மனிதனை
மண்ணுக்குள் புதைத்து சிரித்தது
இந்த கரோனா

பூமியெங்கும்
விரைந்து பறந்த மானுடத்தை
கான்கீரிட் கூண்டுகளுக்குள் கிடத்தியது
இந்த கரோனா

கண்கள் அறியும் எதிரியை
பாய்ந்து தாக்கும் ஏவுகணைகள்
இங்கே அனேகமுண்டு
கண்கள் அறியா சிறு கிருமியிடம்
பதுங்கி ஒழிய
எங்கே இடமுண்டு

உயிர் பயம் கொண்டு மானுடம்
விழி பிதுங்கி கிடந்த போது,,,
வழியெங்கும் வலம் வந்தது
அஃறினைகள் மனித பயமின்றி

சிறகுடைந்த மானுடம்
தத்திக் கொண்டிருந்த போது,,,
வானமெங்கும் வலம் வந்தது
பறவைகள் யாவும் சிறகு விரித்து

கொய்யாத பூக்கள்
செடிகளை அலங்கரிக்கிறது
பறிக்காத பழங்கள்
மரங்களில் பழுக்கிறது
கரியமிலங் கலவாத காற்று
லேசாய் மிதக்கிறது
கழிவு கலவாத ஆறு குளமெல்லாம்
நன்னீராய் இருக்கிறது
வலையில் விழாத உயிரினங்கள்
கடலில் குதிக்கிறது
ஓயாது ஓடிக் கிடந்த மானுடம்
கொஞ்சம் இளைப்பாறிக் கிடக்கிறது

சக உயிர் துயர் கண்டு
இரங்கும் மனங்கள் சில
இன்னல் துடைக்க
கரம் கோர்க்கும் நாடுகள் பல

மனித குலத்தை
மீட்டெடுக்க போராடும்
வாழும் கடவுளர்கள்
நலம் வாழ்க

கரோனா தந்த வலி பெரிது
கரோனா நிகழ்த்திய
பாடம் அதனினும் பெரிது

உலக பொருளாதாரம்
உடைந்தே போனது
இனி எழுமா ?
நிற்குமா ?

உலக மானுடம்
உருக்குலைந்தே போனது
இனி மீளுமா ?
வாழுமா ?

கவலையுறாதே மனிதா
கரோனாவை கொன்று
மானுடம் நின்று வாழும்

இனியாவது
இயற்கையோடு
இயைந்தே இருப்பாய்
இயற்கையை காப்பாய்
பொறுப்பாய்

sasiboojium.blogspot.com

0 comments:

Post a Comment

 

sasi Template by Ipietoon Blogger Template | Gift Idea